இன்ஸ்டா காதல்...காதலி திருநங்கை என தெரிந்ததும் பேச மறுத்த காதலன்...மன உளைச்சலில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை....!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்த இளைஞர், தான் திருநங்கை என்பதை அறிந்து பேசுவதைத் தவிர்த்ததால் மன உளைச்சலில் திருநங்கை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டா காதல்...காதலி திருநங்கை என தெரிந்ததும் பேச மறுத்த காதலன்...மன உளைச்சலில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை....!

சென்னை ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை செம்பா (எ) ஐஸ்வர்யா. இவர்   ஆண்ட்ரியா என்ற மற்றொரு திருநங்கையுடன் வசித்து வந்தார். செம்பா கடந்த இரு தினங்களுக்கு முன் காசிமேட்டில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரி வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு பின் தனியாக வீட்டிற்கு வந்து பின் தனது படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திருநங்கை ஆண்ட்ரியா அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செம்பா-வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் செம்பா ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளதும், கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறிய செம்பா ஓசூரில் உள்ள மஞ்சுநாத் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பின் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமிலேயே இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனைதொடர்ந்து இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான காதலித்து வந்த பெண் ஒரு திருநங்கை என்பது காதலன் மஞ்சுநாத்திற்கு தெரியவந்துள்ளது. அதனைதொடர்ந்து  மஞ்சுநாத் தனது வீட்டில் திருநங்கையை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி செம்பாவுடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த செம்பா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கை செம்பா தற்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒசூரைச் சேர்ந்த இளைஞர் மஞ்சுநாத் தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.