” விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த , .. கோடிகளில் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் “ - அமைச்சர் சக்கரபாணி.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பிற்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு தேவையான 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு 464 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதேபோன்று ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்கு தேவையான 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பாமாயில் பாக்கெட்டுகள் 463 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு:-
“வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்திடவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.07.2023 அன்று மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து என் தலைமையிலும் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் விலைக் கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் 11.07.2023 அன்று நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் ஒன்றிய வர்த்தகம் & தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு 140,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 1௦,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்திடக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 5.40 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் கிடங்குகளிலிருந்து நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ”பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”. - மனோ தங்கராஜ்.