பள்ளி கட்டிடம் விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு... பள்ளி நிர்வாகத்தினர் 3 பேர் கைது....

பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு...

பள்ளி கட்டிடம் விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு... பள்ளி நிர்வாகத்தினர் 3 பேர் கைது....

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக தாளாளர், தலைமை ஆசிரியர் , கட்டட ஒப்பந்தகாரர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக்அபு பக்கர், சித்திக் மற்றும் அப்துல்லா பிரவீன் ஆகிய  5 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் அறிவித்தார். இதனிடையே இறந்த மாணவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி  விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். 

பின்னர் சபாநாயகர், அமைச்சர், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களது உறவினர்களிடம் 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையையும் வழங்கினர்.  தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் விசாரித்ததுடன் பெற்றோர்களிடம் ஆறுதல்  கூறினர்.  

இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றம் கட்டட ஒப்பந்தகாரர் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இதில் வேறுயாரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.