ஆக்கிரமிப்புகளை அகற்ற முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை .. அதனால் தான் தடை உத்தரவு பெறுகிறார்கள்!! - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தான், ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை .. அதனால் தான் தடை உத்தரவு  பெறுகிறார்கள்!! - சென்னை உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, முன்பு போல் அல்லாமல் தற்போது அதிகாரிகள் கடமையை செய்து வருவதாகவும், இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் சட்டப்படி உரிய அறிவிப்புகளையும், நோட்டீஸ்களையும் அனுப்பி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும்,  நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்றுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தாசில்தாரை அடுத்த விசாரணையின் போது ஆஜராக உத்தரவிட்டனர்.