மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் நடந்து செல்லும் வீடியோ காட்சி...!

மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் நடந்து செல்லும் வீடியோ காட்சி...!

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்னும் அசாதாரண சூழல் நிலவுவதால் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் நடந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

மாணவியின் பெற்றோர் குறித்து விசாரணை:

கலவரம் முடிந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தாலும், மாணவி ஸ்ரீமதியின் மறுபிரேதே பரிசோதனை நேற்றே முடிந்தும் அவரது உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் இன்னும் வரவில்லை. 

அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களின் ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் சென்ற  வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி,  மாணவியின் பெற்றோர் எங்கு உள்ளனர் என ஊர் மக்களிடம் விசாரணை நடத்தினார்.

கலவரம் நடந்த பள்ளியில் பகலவன் எஸ்.பி. நேரில் ஆய்வு:

இந்தநிலையில் கலவரம் நடந்த கனியாமூர் தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பகலவன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பகலவன், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ளும் என்றார். மாணவியின் குடும்பத்தினரிடம் பேசி நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இதேபோல் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் இடத்தை சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல்ஹக் மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். 

கிராமங்களில் தண்டோரா:

இதனிடையே கலவரத்தின் போது  தனியார் பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கணிணிகள் உள்ளிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு கள்ளக்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. 

மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் நடந்து செல்லும் காட்சி:

இந்தநிலையில் வழக்கில் பரபரப்பு திருப்பமாக மாணவி ஸ்ரீமதி வகுப்பறையில் இருந்து வெளியில் வரும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 12-ம் தேதி இரவு இறந்தாரா அல்லது 13-ம் தேதி காலை இறந்தாரா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் 12-ம் தேதி இரவு அவர் படிக்கும் அறையில் இருந்து வெளியேறி வராண்டாவில் நடந்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.