அண்ணா பல்கலைக்கழகத்தை விபூதி அடித்த தனியார் நிறுவனம்... நடந்தது என்ன?!!

அண்ணா பல்கலைக்கழகத்தை விபூதி அடித்த தனியார் நிறுவனம்... நடந்தது என்ன?!!

கடந்த 26 -ம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக அரங்கில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் கொடுத்த சிபாரிசு கடிதம் அடிப்படையில் ஹால் வாடகைக்கு கொடுத்தோம் எனவும் கூறியுள்ளார் துணைவேந்தர் வேல்ராஜ்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் இந்நிகழ்வை கண்டிக்கிறது எனவும் நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார் எனவும் கூறிய துணைவேந்தர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இச்செயலை சட்ட பூர்வமாகவும் அணுகுவோம் எனவும் கூறியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி என கேட்டதால் அரங்கத்தை வாடகைக்கு கொடுத்ததாகவும் சிபாரிசு கடிதம் வித்தியாசமாக இருந்ததாகவும் வள்ளிநாயகத்திடம் கேட்காமல் அனுமதி கொடுத்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்வு நடைபெற்றதால் தான் வள்ளிநாயகமும் கலந்து கொண்டிருப்பார் என நினைக்கிறோம் எனக் கூறிய துணைவேந்தர் திட்டமிட்டு ஞாயிறு மாலை 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

இனிவரும் நாட்களில் அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தர மாட்டோம் எனவும் இதை மிகப்பெரிய மோசடியாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   "இந்தியாவில் முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டும் மதசார்பற்ற கழகம்....” கே.எஸ்.அழகிரி!!