மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த நபர்...! ஆயுள் தண்டனை வழங்கிய மகிளா நீதிமன்றம்..!

மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த நபர்...! ஆயுள் தண்டனை வழங்கிய மகிளா நீதிமன்றம்..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மே.குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுத்தங்கம். இவருடைய மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் குழந்தைகள் நல குழுவினர் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மாணவியை ஒரு தலை  பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாயப்படுத்தி, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று செங்கல் சூளைக்கு அருகில் உள்ள கொட்டகையில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, குற்றவாளி கண்ணனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்; சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கால சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
அதோடு தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.