உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஒட்டல் உரிமையாளர் கைது...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி, உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஒட்டல் உரிமையாளர் கைது...

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில், அம்ஜத் பாஷா என்பவருக்குச் சொந்தமான 7 ஸ்டார் என்ற அசைவ உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியர் தங்களது இரு குழந்தைகளுடன் கடந்த 8ஆம் தேதி அன்று இரவு தந்தூரி வகை உணவுகளை சாப்பிட்டுள்ளனர். இதை அடுத்து ஓட்டலை விட்டு வெளியே சென்ற போது, லோஷினி என்ற பத்து வயது சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி போலீசார், விசாரணை மேற்கொண்டதில், சிறுமி சாப்பிட்ட அதேநாளில் அந்த ஓட்டலில் சாப்பிட்ட 37 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. 16 பேர் தற்போது ஆரணி மருத்துவமனையிலும், 6 பேர் வேலூரிலும், 4 பேர் ராணிப்பேட்டையிலும் சிகிச்சை பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முணியாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில், ஆரணியில் உள்ள 10க்கும் மேற்பட்ட  உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு  தயாரிக்கும் சமையல் கூடம் மற்றும் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, 20 கிலோ அளவிலான கெட்டுப் போன சிக்கன், மட்டன், மீன் போன்றவை பறிமுத்ல செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.