முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் விவகாரம்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் விவகாரம்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது குறித்து விதிகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கொரோனா சிகிச்சையின்போது முன்கள பணியாளராக இருந்த அவர், 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனையடுத்து தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இது குறித்த விசாரணையின்போது, கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்தும் விதிகளை வகுக்க கடந்த மே 11-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதன்படி மாநில அரசு எந்த விதியையும் இதுவரை வகுக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, உரிய விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.