ஆசிரமத்திற்கு சென்று வந்த மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவன்.... ஆவடி அருகே பயங்கரம்

சென்னை அடுத்த ஆவடி அருகே ஆசிரமத்துக்கு சென்று வந்த மனைவியை , கணவர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரமத்திற்கு சென்று வந்த மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவன்.... ஆவடி அருகே பயங்கரம்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள சுதேசி நகர் தெருவில் வசிப்பவர் சந்திரமோகன். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு புவனா ஸ்ரீ என்ற மகளும், சஞ்சய் ஸ்ரீமோகன் என்ற மகனும் உள்ளனர். மனைவி செல்வி அடிக்கடி கோயில்களுக்கு சென்று விடுவதால் வீட்டில் உள்ள வேலையை சரி வர கவனிக்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மனைவி செல்வி விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இது பற்றி கணவன் கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபம் அடைந்த சந்திரமோகன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து செல்வி தலையில் சரமாரி தாக்கி உள்ளார்.ரத்தம் கொட்டிய நிலையில் நின்றிருந்த செல்வி நேராக வீட்டின் அருகே உள்ள குபேர ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று படுத்து உள்ளார். 

மயங்கிய நிலையில் இருந்த செல்வியை அங்கிருந்தவர்கள் அவரது கணவர் சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் செல்வி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர், கணவர் சந்திரமோகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.