” அகந்தையுடன் தொடர்ந்து பேசி வரும் ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” - வைகோ ஆவேசம்.

” அகந்தையுடன் தொடர்ந்து பேசி வரும்  ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” - வைகோ ஆவேசம்.

அகந்தையுடன் தொடர்ந்து பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

சென்னை மாநகராட்சியின், சென்னை நடுநிலைப் பள்ளியின் காலை உணவு திட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

அந்த நிலையில் *சென்னை, எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி,  நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார். 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது:-

” இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.  ஏழை எளிய குடும்பத்தின் பிள்ளைகள் சரியான சாப்பாடு இல்லாமல் காலையிலேயே பட்டினியாக பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த மாணவர்களை கண்ட முதலமைச்சர் அவர்களுக்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்”.

“மதம் ஜாதி கட்சி அனைத்தையும் கடந்து அத்தனை பிள்ளைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று மனிதாபிமானத்தோடு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்”  என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ”செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நீட் ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளோம். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் தமிழ்நாட்டிற்கு கேடு செய்யும் வகையில் அகந்தையுடன் பேசி வருகிறார். எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்”, என்றார்.

இதையும் படிக்க   | ”2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முடிவு” பிரதமர் மோடி!