“நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது” - மு.க.ஸ்டாலின் உரை!

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது” -  மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர், நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழகம் மிக முக்கிய பங்களிப்பை தருவதாக தெரிவித்தார். தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசு - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்றும் அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்த  முதலமைச்சர், மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது என்றும், சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின் வளர்ச்சி என்றும் கூறினார்.

கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழகம் சிறப்பாக விளங்குவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.