எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதி வெடிவைத்து தகர்ப்பு..!

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கரைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து நீரின் திசையை மாற்ற, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்டு ஜேசிபியால் அகற்றப்பட்டன.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதி வெடிவைத்து தகர்ப்பு..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம், எல்லீஸ்சத்திரம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ் தடுப்பணை கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உடைந்து சேதமடைந்தன. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஆற்றில் அதிகமாக வந்ததால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும், பாதையாகவும்  உருவாகி ஏனாமதிமங்கலத்தை இணைக்கும் பாலத்தின் கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதனால்  ஏனாதிமங்கலம் - விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலை உருவானது. அதனால் கரைப்பகுதியில் பாறாங்கற்களை கொண்டு பலப்படுத்தினர். பின்னர் ஆற்று நீரானது கரையின் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அணைக்கட்டின் மையப்பகுதியில்   தடுப்பு கட்டை, சிமெண்ட் தூண் ஆகியவற்றை டெட்டனேட்டர் குச்சி, வெடிமருந்து வைத்து உடைத்து ஜேசிபி இயந்திரத்தால் அப்புறப்படுத்தினர். வெள்ள நீர் வரத்து குறைந்து உள்ளதாலும், வெள்ள நீரானது மையப்பகுதி வழியாக செல்லும் விதமாகவும் உடைக்கப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன.