அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. 

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

அப்போது வருமானத்துக்கும் அதிகமாக ரூ. 4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான  விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுபோலீஸாருக்கு உதவுவதற்காக, தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தரப்பிலும் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் அக.11ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், “இந்த வழக்கு விசாரணையில் உதவுவதற்காகவே நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி அதிகமான சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். கூடுதல் சாட்சியங்களும் உள்ளன.

இவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். எனவே, நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தரப்பு மற்றும் அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

“வழக்கின் விசாரணை நிறைவடையும் நிலையில், 3-வது அமைப்பின் குறுக்கீடு தேவைஇல்லை. எனவே, அமலாக்கத் துறை அளிக்கும் ஆவணங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்றுஅவர்கள் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செல்வம், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையானது  தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும்  படிக்க  | லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!