பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை....புதரில் வீசி சென்ற கொடூரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*

பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை....புதரில் வீசி சென்ற கொடூரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கொந்தமூர் கிராமத்தில் அரசு தொடக்கபள்ளி அமைந்துள்ளது. இதன் அருகே இன்று மதியம் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது அருகில் உள்ள முட்புதரில் குழந்தை அழுவது போல சத்தம் கேட்டுள்ளது.

உடனே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே  பிறந்து சில மணி நேரமே ஆன   ஆண் குழந்தை தொப்புள்கொடியுடன் கிடந்தது.

பின்பு சிறுவர்கள் கிராமத்திற்கு சென்று ஊராரிடம் கூற உடனே அங்கு சென்ற கிராம மக்கள் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.