"தமிழ்நாடு, தலையாட்டி பொம்மையல்ல" அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

"தமிழ்நாடு, தலையாட்டி பொம்மையல்ல" அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அலுவல் மொழிக்கான 38வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமைையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா "மெதுவாக ஏற்றுக்கொண்டாலும் இறுதியில் அனைவரும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என பேசியுள்ளார். மேலும் வட்டார மொழிகளோடு இந்தி போட்டியிடவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  "எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல" என தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பெற்றோர் எதிர்ப்பால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் விபரீத முடிவு!