உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதித்த வழக்கு: பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதித்த வழக்கு:   பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு குன்னம் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.  

பிரபலபதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி மணிப்பூர் சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசும் போது, வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் கூறி பெரம்பலூர் மாவட்டம் காடூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் குன்னம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதனடிப்படையில் குன்னம் போலிஸார் பத்ரிசேஷாத்ரி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த சனிக்கிழமை பத்ரிசேஷாத்ரியை சென்னையில் கைது செய்து  பெரம்பலூர் அழைத்துவந்தனர்.

அதனைத்தொடர்ந்து, பத்ரிசேஷாத்ரி குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறைநடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி கவிதா, பத்ரிசேஷாத்ரியை எதிர்வரும் 11ந்தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி பத்ரிசேஷாத்ரி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, பத்ரிசேஷாத்ரி ஜாமீன் கேட்டு குன்னம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல் குன்னம் போலீஸார் பத்ரிசேஷாத்ரியை நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் மனு, போலீஸ் கஸ்டடி மனு என இரண்டு மனுக்களும் இன்று குன்னம் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்பு விசாரணைக்கு வந்தது.

முதலில் காவல்துறை கஸ்டடி கேட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி போலீஸ் கஸ்டடி தேவை இல்லை என்றும் அதற்கான முகாந்திரம் இல்லை என்றும் கூறி போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தார். அதனைதடுத்து பத்ரிசேஷாத்ரி தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதனை  விசாரித்த நீதிமன்றம் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையும் படிக்க  | மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெற CBI-க்கு தற்காலிக தடை...!