'அதிமுக -விற்கு எதிராக மாநில பாஜக' எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!

'அதிமுக -விற்கு எதிராக மாநில பாஜக' எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!

மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக உள்ளதா? என செய்தியாளர்களின் கேள்விக்கு 
உங்களது கேள்வியிலே பதில் அடங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது அந்த இடத்தை ஆய்வு செய்து விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன். மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர், மூத்த கட்சி நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த மாநாட்டின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என தெரிவித்தார்.

நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு பல்டி அடிக்கிறார்கள் என பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற சம்பவம் குறித்து முதல்வர் அறிவித்தது குறித்த கேள்விக்கு, 1989 இல் நடைபெற்ற சம்பவம் ஞாபகம் வந்து அதை வெளிப்படுத்தியுள்ளதாக மக்கள் பார்க்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை குறித்து பேசினார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன் அந்த அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் எதிர்க்கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது.

முதல்வர் கண்ணெதிரே ஒரு பெண் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய போது மீண்டும் முதல்வராக தான் இங்கு வருவேன் என்று சபதம் மிக்க அதை நிறைவேற்றினார். இன்றைய தினம் முதலமைச்சர் பொய்யான செய்தியை சொல்கிறார். சட்ட பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதற்கு ஜெயலலிதா பதிலளிக்க முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினார். சட்டப்பேரவையில் கருப்பு தினமாக அந்த நாளை பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றது இல்லை. ஆனால் முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார் என தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்பினார்களா. 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பாசன விவசாயிகள் உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றம் மன்றத்தை ஒத்தி வைக்க செயல்பட்டது. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்வில் ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள் என தெரிவித்தார்.

மேலும், மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக உள்ளதா? என செய்தியாளர்களின் கேள்விக்கு உங்களது கேள்வியிலே பதில் அடங்கியுள்ளது என பதிலளித்தார்.

இதையும் படிக்க:நாங்குநேரி சம்பவம்; அட்டவணைப் பிரிவினர் ஆணைய உறுப்பினர் ஆய்வு!