ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்...! நிறைவேற்றுவாரா மோடி...? 

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்...! நிறைவேற்றுவாரா மோடி...? 

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியுள்ளார். 

ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட  ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 

இதன் ஒரு பகுதியாக சென்னை - பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் மற்றும் தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். 

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு உரிய நிதி பங்களிப்புகளை வழங்க வேண்டும். சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக  மத்திய அரசின் வசம் உள்ள பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்க வேண்டும். காலணிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும். பி.எம்.மித்ரா தொழில் பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டை நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை  சென்னையில் அமைக்க வேண்டும். ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்பட்டியலின மற்றும் 'க' என்ற விகுதிகளுடன் முடியும் பெயர்களை 'ர்' என்ற விகுதியுடன் மாற்ற வேண்டும். கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பெரும்பங்கைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் சமமான அரசியல் உரிமைகளை அளிக்க இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும். பாக் -வளைகுடாப் பகுதிகளில் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.