கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு பிரத்யேக வசதி - தமிழக அரசு

கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய வசதியாக, சாய்வு தளங்களை அமைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு பிரத்யேக வசதி - தமிழக அரசு

48 முதுநிலை கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக, சாய்வுதளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் அதனை செயல்படுத்தும் விதமாக, சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்திடவும், முதுநிலை  கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் வசதிகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தை, பக்தர்கள் அறிந்திடும் வகையில் அறிவிக்க வேண்டும் எனவும், திருக்கோயில் நுழைவுவாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகளாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென ஒரு தனி பணியாளரை பொறுப்பில் அமர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில், தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் அமைத்திடவும், இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்கவும், இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.