சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயது முதிர்ந்த பெற்றோரை விரட்டியடித்த மகன்கள்...
திருவண்ணாமலை அருகே வயது முதிர்ந்த பெற்றோரை நடுரோட்டில் தவிக்கவிட்ட இரண்டு மனிதாபிமானமற்ற, மகன்களுக்கு தானமாக எழுதி கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் தங்கள் பெயருக்கு மாற்றித்தர கோரி தாய், தந்தை இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சின்னம்மாள். முதியவர்களான இவர்களுக்கு காத்தவராயன், ஜெயலஷ்மி,ஜான்சிராணி,சங்கர், செல்வி ஆகிய ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
வயது முதிர்ந்தவரான தந்தை மாணிக்கம் சுயமாக சம்பாதித்து நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று மூத்த மகன் காத்தவராயன், இளைய மகன் சங்கர் ஆகியோர் தாய் தந்தையை பொருப்போடு பார்த்துக்கொள்வதாகவும், அவர்களுக்கான மருத்துவச் செலவு மற்றும் உணவு உடை ஆகியவற்றைத் தந்து பராமரித்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். அதனையடுத்து தாய் தந்தை இருவரும், மகன்கள் இருவரின் பெயரில் வீடு மற்றும் 5 ஏக்கர் நிலம் கிணறு உள்ளிட்டவற்றை தான செட்டில்மென்ட்டாக எழுதி கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு இரண்டு மகன்களும் நிலம் மற்றும் வீட்டை கைப்பற்றி அனுபவித்து வந்துள்ளனர், பின்னர் வயது முதிர்ந்த தந்தை மற்றும் வயது முதிர்ந்த தாய் ஆகிய இருவருக்கும் கொடுத்த வாக்குறுதியை எதையும் செய்யாமல் இருவரையும் வீட்டைவிட்டு வெளியில் துரத்தி உணவு உடை எதையும் கொடுக்காமல் தவிக்க விட்டு வந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதமாக உணவு இல்லாமல் தவித்து தெரு வீதியில் வாழ்ந்து வந்த வயதுமுதிர்ந்த தம்பதியினர் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து முதியோர் நலன் காக்கும் சட்டத்தின்படி மீண்டும் எங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து தருமாறு கண்ணீர்மல்க கோரிக்கை மனுவினை அளித்தனர்.
வயது முதிர்ந்த பெரியவர்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ், உடனடியாக தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் உங்கள் பெயருக்கு மாற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்