அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவதூறு..! சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..!! உயர்நீதி மன்றம் அதிரடி...!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவதூறு..! சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..!! உயர்நீதி மன்றம் அதிரடி...!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட  சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜக-வின் ஐ.டி.பிரிவின் முன்னாள் தலைவரான நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டார்.  மேலும் இது தொடர்பாக நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், செந்தில்பாலாஜி மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுவதாகவும், தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற செந்தில்பாலாஜி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நிர்மல்குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார் .

சி.டி.ஆர்.நிர்மல்குமார் சமீபத்தில் பாஜக-விலிருந்து அதிமுக-விற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.