பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் சந்தித்த உறவினர்கள்... சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட, வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சென்றபோது, நடுவழியில் உறவினர்கள் அவர்களை சந்தித்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்த சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.