லண்டன், துபாய் பூங்காக்கள் போல இனி செம்மொழி பூங்காவும் ...” - தமிழ்நாடு அரசு.

லண்டன், துபாய் பூங்காக்கள் போல இனி  செம்மொழி பூங்காவும் ...”  - தமிழ்நாடு அரசு.

செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காபோலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் மேம்படுத்த உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 4 காணி, 18 கிரவுண்ட்,  1683 சதுர அடி (114 கிரவுண்ட் 534 சதுர அடி) நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து ஜூன் 5-ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்பாளராக இல்லாத நிலையில், விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து  இடத்தை எடுத்துள்ளதால், கடந்த 5ம் தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.  

இதையடுத்து, அரசு தரப்பில்:- 
இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் இடத்தை அரசு எடுத்துள்ளதாகவும்,  நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதோடு , நிலத்தில் விளம்பரம் பலகைகள் வைத்தும், வாடகை வசூலித்தும், தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தி உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மீட்கப்பட்டுள்ள இந்த நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காபோலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் மேம்படுத்த உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இடையீட்டு மனுதாரரான புவனேஷ் குமார் தரப்பில், அரசுக்கு சொந்தமான நிலத்தை  மீட்க   நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும், பொதுமக்களின் நலனுக்காகவே இந்த நிலத்தை எடுத்துள்ள அரசு, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த இடம் வர உள்ளதாகவும் வாதிடப்பட்டது. 

இதையும் படிக்க    | "மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல" திருமாவளவன் குற்றச்சாட்டு!