"அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு துண்டாக்கப்படும்" அண்ணாமலையை மறைமுகமாக எச்சரித்த செல்லூர் ராஜூ!

"அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும், நாக்கு துண்டாக்கப்படும்" என பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக எச்சரித்துள்ளார். 

மதுரை  மாநகர் அ.தி.மு.க., தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசுகையில், " அண்ணா அவர்களையும், எம்.ஜி.,ஆர் அவர்களையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணாமீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டு இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப் படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் டாக்டர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் குடும்பம் திமுகவை குடும்ப கட்சியாக வைத்துள்ளார்" எனக் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு, நான் தான் முதலமைச்சர் என்று சொல்கின்றனர். சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடியாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் ஏரியாவாக மாற்றுக் கின்றனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு தான் உரிமை உண்டு. திமுக வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறார். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம்.  ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மதப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர் நாக்கு அழுகிவிடும். பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு காரணம் பெரியார், அண்ணா அவர்கள் தான் காரணம். அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை திமுக மூடுவிழா கண்டுவருகிறது. எனவே அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொண்டார்.

இதையும் படிக்க:திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!