மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கிய ரோப் கார் சேவை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 50 நாட்கள் பிறகு ரோப்கார் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். 

இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மலைக் கோவில் செல்ல படிவழிப்பாதை, வின்ச், ரோப் கார் என மூன்று வழிகள் உள்ளன. 

இதில் இரண்டு நிமிடத்தில் மலை உச்சியை அடைய பயன்பாட்டில் உள்ள ரோப் கார் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரோப்கார் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.  

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 50 நாளுக்கு வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. புதிய பேரிங்குகள், சாப்டுகள், வடக்கயிறுகள் மாற்றப்பட்டு  பெட்டிகளுக்கு புது பொலிவு செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்காக அதிகாலை ரோப் கார் பெட்டிகளுக்கும், மோட்டார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூசணிக்காய் சுற்றப்பட்டு  ரோப்கார் இயக்கப்பட்டது . 50 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.