"நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்" -சீமான்!

"நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்" -சீமான்!

நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில், அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

 இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரைவிடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,  சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும். அவர் வகுத்தளித்த அரசியலைப்பு சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறும்வரை, அண்ணல் அம்பேத்கர் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ள சீமான்,  எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது என அறைக்கூவல் விடுத்துள்ளார்.

ஆகவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:காலநிலை மாற்றம்: "பாதிப்புகள் மிக தொலைவில் இல்லை" பிரதமரின் முதன்மை செயலாளர் தகவல்!