கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு...!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த பின், பள்ளிகள் ஜூன் மாதம் 13-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாநகர பகுதியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர். அப்போது மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.
இதேபோன்று ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு தேனி மாவட்டத்திலுள்ள 681 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடம் பள்ளிக்கு வருகை தந்தனர்.
இதேப்போல தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் ராமநாதன் ரோஜா பூ, பேனா மற்றும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.