தமிழக மீனவர்களை உடனடியாக விடுவியுங்கள்.. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவியுங்கள்.. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்:

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 20ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, படகிற்கான உரிமையை கோர வேண்டுமென்ற நிபந்தனையின்பேரில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது இலங்கையில் நிலவும் சூழல்நிலை காரணமாக அவர்களால் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரிடம்,கோரியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை, சொந்த நாட்டிற்கு அழைத்து வர உதவியதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.