அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு; நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய R.B.V.S. மணியன்!

அம்பேத்கர்,  திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியன், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்

சென்னை தியாகராயநகரில் கடந்த 11ம் தேதி  நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன்,  திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். 

இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு  நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர் சி பால் கனகராஜ் ஆஜராகி, மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி மணியன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். 

காவல்துறை சார்பில் மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர் தான் நினைவுக்கு வரும் நிலையில் அவரை மணியன்  இழிவுப்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும், மணியன் சார்பில் சமர்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2021ம் ஆண்டை சேர்ந்தவை என்றும் மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். 

இதனையடுத்து ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வரும் 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இதையும் படிக்க: சென்னையை பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது!