செப் -30க்கு சொத்து வரியை செலுத்த வேண்டும்; சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியின் முதல்  அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்   செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டுமென மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரைநிதியாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த  ஜுன் மாதம் முதலே அறிவுறுத்தி வருகிறது.

சென்னையில் உள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998-இன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் நிலையில், சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

மேலும் மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி தற்போது சொத்து வரி இந்த அரையாண்டுக்காக (ஏப்ரல் - செப்டம்பர்) வரை ரூபாய் 700 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த அரையாண்டுக்காக (ஏப்ரல் - செப்டம்பர்) ஏப்ரல் மாதத்திலிருந்து, நேற்றைய தினம் வரை, ரூபாய் 650 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்ட்டுள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது 90 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து இந்த அரையாண்டில், 6.5 லட்சம் பேர் இன்னும் சொத்து வரி செலுத்தவில்லை. இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ள நிலையில் அனைவரும் முறையாக சொத்து வரியை செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க:உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!