தனிமைப்படுத்தபட்டவர்களின் தகவல்களை தனியார் மருத்துவமனைகள் வழங்க வேண்டும் - ககன்தீப் சிங் பேடி உத்தரவு!
கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் தகவல்களையும் தனியார் மருத்துவமனைகள் சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் குறித்து உரிய தகவல்களை தனியார் மருத்துவமனைகள் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.