திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்: செந்தில்பாலாஜி

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.  

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்: செந்தில்பாலாஜி

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அதிமுக  ஆட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பாதிப்படைந்து குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்த பணிகள்3 அல்லது 4 மாதங்களுக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

 திமுக தேர்தல் வாக்குறுதிகளை  ஒவ்வொன்றாக அரசு செய்து நிறைவேற்றி வருகிறது. அதேபோன்று மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 3ல் ஒரு பங்கு மின்சாரத்தை நாம் கொள்முதல் செய்து வரும் நிலையில், நமக்கான உற்பத்தியை நாமே செய்து கொள்ள வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.

 இதுவரை 14 லட்சத்து 69 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை மாற்றி, பணம் செலுத்தி உள்ளனர். எனவே யாருக்கெல்லாம் கட்டணத்தில் சந்தேகம் உள்ளதோ, அவர்கள் மின் வாரிய அதிகாரியிடம் கூறினால், அவர் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விளக்கத்தை அளிப்பார். கணக்கீட்டாளர் தவறு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது. ஆனால் கடந்த ஆட்சியிலேயே மின் தடை இருந்து வந்துள்ளது என்றும், இனி வரும் காலங்களில் சீரான மின் விநியோகம் ஆகியவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 நான்கரை லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்க காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறிய அமைச்சர், கடந்த ஆட்சி தான் மின்மிகை மாநிலமாக இருந்தபோது, ஏன் இந்த நான்கரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

 கடந்த ஆட்சியை விட தற்போது மின் தடை காலம் 1000 நிமிடங்கள் குறைந்துள்ளது என்றும் மின் தடை குறைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  மின்சார வாரியத்தின் சார்பில் 2006- 2010 திமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட அதிமுக ஆட்சியில் உற்பத்தியான மின்சாரம் குறைவு என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.