அழகு நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. உரிமையாளரை கைது செய்த போலீசார்

சென்னையில் பல பெண்களை ஏமாற்றி, கோடிக் கணக்கில் பணம் பறித்ததோடு, அழகு நிலையத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அழகு நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. உரிமையாளரை கைது செய்த போலீசார்

சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், சாலிகிராமம் பகுதியில் தனியார் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அதில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர், ஆனந்தராஜ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ஆனந்தராஜ் மீது, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பல லட்ச ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பெற்று, பின்னர் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக மதுரவாயல் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், வேறொருவரின் வீட்டை தன்னுடைய வீடு எனக்கூறி, பெண்ணொருவருக்கு குத்தகைக்கு விட்டு பணம் பெற்று ஏமாற்றியதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஆனந்தராஜை, போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில், தி.நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆனந்தராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் பல பெண்களை ஏமாற்ற ஆனந்தராஜிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.