தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 3-வது நாளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி கோயம்பேட்டி லிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,575 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,675 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தீபாவளிiள கொண்டாட சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
நேற்று மாலை முதல் மக்களின் கூட்டம் சற்று அதிகரித்தே காணப்படுவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலைய நுழைவு வாயிலில் கிருமி நாசினி பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறும் நபர்கள் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக முக கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இன்றும் பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை தெற்கு சரக கே.கே நகர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் பிடித்துள்ளனர். இரவு முழுவதும் நடந்த வாகன சோதனையில் தனியார் பேருந்துகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட பேருந்துகளை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பிடித்து வைத்து வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.