கனியாமூர் பள்ளி மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற திட்டம் - அன்பில் மகேஷ்!

கனியாமூர் பள்ளி  மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற திட்டம் - அன்பில் மகேஷ்!

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக நிகழ்ந்த கலவரத்திற்கு பிறகு, கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். 

ஸ்ரீமதியின் மரணம்:

கனியாமூர் தனியார் பள்ளி  மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.  கலவரத்தில் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட பள்ளி உடைமைகள் அனைத்தும் தீ வைத்து  எரிக்கப்பட்டது. அத்துடன் வகுப்பறைகள் அடித்து உடைத்து சூறையாடப்பட்டது.  இதன் காரணமாக அந்த பள்ளியில் பயின்ற சுமார் 3500  மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

வேறு பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை:

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து வெடித்த கலவரத்தால், கனியாமூர் பள்ளி மாணவர்களின் படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. இதனால் அந்த பள்ளியில் படித்த மாணவர்களை அருகிலுள்ள வேறு பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

ஆன்லைன் வகுப்பு:

இதனிடையே கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், மேலும்  எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.