சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...! விபத்திற்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்...!

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்திற்கு காரணமான ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...! விபத்திற்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்...!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சித்திரவிடங்கத்தில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் மாதவன் என்பவர் உயிரிழந்ததையடுத்து, விபத்திற்கு காரணமான ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி  உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் மாதவன் (50). இவர் பினாயில் தயாரித்து கடைகடையாக சென்று விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, ஆவுடைடையார்கோவில் அருகே சித்திரவிடங்கன் பகுதியில்,  தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது  எதிரே வந்த கார் ஒன்று பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாதவன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். 

பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.