புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

உயர்நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இன்று தலைமை நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார். 

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு கூடுதல் நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா,  பதவி பிரமானம் செய்துவைத்தார். 

பின்னர் இரு புதிய நீதிபதிகளையும், தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார். அப்போது அவர், சாதாரண குடும்பத் பின்னணியில் இருந்து தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கும் இவர்கள் இருவரும் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

இதே போல புதிய நீதிபதிகளை வரவேற்று பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மின்னணு முறை மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை நீதிமன்றங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். ஏற்புரையாற்றிய இரு நீதிபதிகளும், தங்கள் மீது  வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதாக தெரிவித்தனர். புதிய நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைந்துள்ளது. 

நீதிபதி என்.செந்தில்குமார், நாராயணசாமி - சங்கரவல்லி தம்பதியருக்கு மகனாக 1970ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். தந்தை நாராயணசாமி ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். தாய் சங்கரவல்லி,  அச்சரப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2006 முதல் 2011 வரை பணியாற்றியவர்.

சென்னை பெரம்பூரில் பள்ளி படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார். பின்னர், தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தின் ஜூனியராக பணியை தொடங்கினார்.

நீதிபதி அருள் முருகன் தர்மபுரியில், கணபதி -நீளாமணி தம்பதியருக்கு 1976 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை தலைமை  ஆசிரியராக பணியாற்றியவர். சேலத்தில் பள்ளி படிப்பையும் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து. 1999 ஆம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியர் ஆக பணியை தொடங்கினார்.

இதையும் படிக்க: பாம்பை வைத்து நடனமாடிய இளைஞர் கைது!