மரணத்தில் இருந்து தப்பி திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி!
ஓமலூர் அருகே திருமணம் நடத்தி வைக்க சென்ற பூசாரி கால்வாயை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்துடன் ஐம்பது அடி தூரம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தண்ணீரிலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய பூசாரி யாரிடமும் நடந்த சம்பவம் பற்றி சொல்லாமல் நடந்தே சென்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தை நடத்தி வைப்பதற்காக கோவில் பூசாரி அர்ச்சுனன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கமலாபுரம் சின்ன ஏரி நிரம்பி கால்வாய், சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் அந்த வழியே சென்ற பூசாரி சாலையில் குறைவான தண்ணீர் செல்வதாக நினைத்து தண்ணீரில் சாலையை கடந்துள்ளார். அப்பொழுது தண்ணீரின் வேகத்தில் பூசாரி வண்டியுடன் மூழ்கி கால்வாயில் சுமார் 50 அடி தூரம் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்க | ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம்..! உயர் நீதிமன்ற உத்தரவின் முக்கியத்துவம்..!
தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பூசாரி அதிகாலை 3 மணியளவில் தட்டு தடுமாறி அருகில் இருந்த மர குச்சிகளை பிடித்து மேலே ஏறி அதிஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பூஜை சாமான்கள் மற்றும் கோவில் சாவி அனைத்தும் வண்டியிலேயே சிக்கிக்கொண்டது.
பின்னர் அங்கிருந்து நடந்தே சென்று மீண்டும் பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு சென்ற பூசாரி கோவிலின் பூட்டை உடைத்து கோவிலைத் திறந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
மேலும் படிக்க | கோவில் அர்ச்சகர்கள் நியமன வழக்கு : அரசிற்கு சாதகமாக தீர்ப்பு வருமா?
இது பற்றி திருமண குடும்பத்தாரிடம் எதுவும் சொல்லாத பூசாரி காலையிலிருந்து மூன்று மணி நேரம் போராடி பாதாள சொருவி மூலம் தேடி தண்ணீரில் சிக்கிக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார். திருமணம் நடத்தி வைக்க சென்ற பூசாரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.