சட்டம் ஒழுங்கை கண்காணிக்க புது தொழில்நுட்பங்கள்.....

சட்டம் ஒழுங்கை கண்காணிக்க புது தொழில்நுட்பங்கள்.....

சென்னை காவல்துறையில்  சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். 

தொடர்ச்சியான ஆய்வு:

அதில் சிசிடிவி கேமரா முதல் ட்ரோன் வரை முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாடு வாகனத்தை பயன் படுத்துவதற்கான ஆய்வை சென்னை காவல்துறை உயரதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர்.

மக்களை கண்காணிக்க:

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் கூடுதல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிநவீன வாகனத்தை ஆய்வு செய்தனர்.

இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் கண்காணிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கூட்டங்கள் இருக்கும் இடங்களில் நடமாடும் வாகனத்தை வைத்து கண்காணிப்பில் ஈடுபடலாம் என போலிசார் தெரிவிக்கின்றனர். 

நவீன சிசிடிவி:

5 நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட சி சி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் தெளிவான துல்லியமான காட்சிகளையும் இரவு நேரங்களில் கூட காட்சி பதிவு மேற்கொள்ளும் வசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  மேலும் 360 டிகிரி சுழன்று வீடியோ படம் எடுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 500 மீட்டர் தொலைவில் வரை பொதுமக்களை கூட்டங்களில் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன ட்ரோன்கள்:

மேலும் ஐந்து கிலோ மீட்டர் வரை பறந்து சென்று கண்காணிக்கும் அதிநவீன ட்ரோன்களும் இந்த வாகனத்தில் உள்ளதாகவும், வாகனத்தில் மூன்று காவலர்கள் கணினியை வைத்துக்கொண்டு சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்கும் வசதியுடைய வாகனம் என தெரிவித்துள்ளனர்.

விரைவான நடவடிக்கை:

குறிப்பாக இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், பொதுமக்கள் கூடும் கூட்டத்தில் அருகில் இருக்கும் காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு குற்றங்கள் நடைபெறும் இடத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் இடத்திலும் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்

அதனுடன் இணைத்து:

அதுமட்டுமல்லாது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஏ என்பிஆர் கேமராக்கள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் மென்பொருள் வசதிகளையும் கேமராவில் பொருத்தி கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொழில்நுட்ப வசதிகள்:

சுமார் 56 லட்சம் மதிப்புள்ள இந்த அதிநவீன வாகனத்தை வாங்குவதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதுபோன்று பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை சென்னை காவல்துறையில் புதிதாக அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையும் படிக்க:   15000ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.... மீட்பு பணிகள் தீவிரம்!!!