ராஜீவ் வழக்கு: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகனை விடுவிக்க கோரி நளினி மனு!

ராஜீவ் வழக்கு: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகனை விடுவிக்க கோரி நளினி மனு!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி, அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறி முருகன், திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், முருகனின் மனைவி நளினி தனது கணவரை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி, நளினி மத்திய அரசுக்கு மனு அனுப்பியிருந்தார். ஆனால் அந்நத மனு மீது மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்வில்லை. இதனால் மத்திய அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும்,  பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனால் அங்கிருந்து வெளியில் வர முடியவில்லை எனவும், அதனால் திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினர்களுடன் தங்க அரசு அனுமதித்துள்ளதாகவும், சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புக அரசு அனுமதித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிக்க | கொட்டித் தீர்க்கும் கனமழை; அருவிகளில் குளிக்கத் தடை!