இந்த 7ல் கவனம் செலுத்துங்கள்... முதலமைச்சர் தொண்டர்களுக்கு அட்வைஸ்!!

இந்த 7ல் கவனம் செலுத்துங்கள்... முதலமைச்சர் தொண்டர்களுக்கு அட்வைஸ்!!

"பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் - கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்" என முதலமைச்சர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, " திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு முக்கியமான கருத்தை நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 'பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ள கருத்து மிக மிகச் சரியானது. அதனையே திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" கூறியுள்ளார்.

மேலும், எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் " நாட்டில் நடைபெறும், பற்றி எரியும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள். சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்துவிடக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

2011ல் CAG வெளியிட்ட அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இடம் பெற்றிருந்தது. அதனை ஊடகங்கள் பெரிதளவில் பேசியதால், ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. அது போலவே, 2022க்கான கணக்கு தணிக்கை அறிக்கை வெளியாகி, 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இதனை மேற்கோள் காட்டி பேசிய முதலமைச்சர், "

*பாரத்மாலா திட்டம், 

*துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், 

*சுங்கச் சாவடி கட்டணங்கள், 

*ஆயுஷ்மான் பாரத் திட்டம், 

*அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், 

*கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம் மற்றும் 

*எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் 

ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஏழு திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளன, விதிமீறல்கள் நடந்துள்ளன, நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறியுள்ளன என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 7.50 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க" என பேசியுள்ளார்.

மேலும், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்கள் எனவும் இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கான அடையாளமாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்த அவர் பா.ஜ.க.வின் ஊழல் மதவாத எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான  இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம் எனவும் எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது என்று அனைவரையும் கேட்டுக் கொள்வதாக பேசியுள்ளார்.