மோடிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்...! ஆ.ராசா...!!

மோடிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்...! ஆ.ராசா...!!

மோடியை கண்டு வல்லரசான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே பயப்பட்டாலும் கூட இந்தியாவை மதவாத, ஊழல்களில் இருந்து காப்பாற்ற மோடிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார்.

தாம்பரம் சண்முகம் சாலையில் திமுக நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொது செயலாளருமான ஆ.ராசா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிதி நிலை அறிக்கை பற்றி விளக்கி பேசினார்கள்.

பின்பு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை என குற்றம் சாட்டினார். 15 நாட்களாக நாடாளுமன்றம்  முடக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடாளுமனறத்தை முடக்கலாமா? அதனால் மக்கள் பணம் வீணாகிறது என்றார்.

ஆதானி மோசடி செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இதற்கு பதில் பாஜக தரவில்லை என விமர்சனம் செய்தார். வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் பிரச்சினை, ஆன்லைன் ரம்மியால் 43 பேர் உயிரிழந்தது, நீட் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் இங்கு உள்ளது. அவை நாடாளுமன்றத்தில்  பேசப்படாமல் முடக்கப்படுள்ளது. திராவிட இயக்க தலைவர்கள் கற்று வந்ததை களவாட மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் வருகிறது. ஆனால் அவர்களை விரட்ட மு.க.ஸ்டாலின்  போலீஸ் போல் இருந்து காப்பாற்றுகிறார் என்றார்.

பிபிசி சேனல் தடை செய்தற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்காமல் உலக வல்லரசு நாடான அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளே மவுனம் சாதித்தது. ஆனால் முக.ஸ்டாலின்  மட்டுமே அதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்தார். இவ்வாறாக,மோடியின் செயல்களுக்கு வல்லரசு நாடுகள் பயப்பட்டாலும் இந்தியாவை மதவாத, ஊழல்களில் இருந்து காப்பாற்றும் நிலையான ஒரே  தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என ஆ.ராசா பேசினார்.

முன்னதாக 4 மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு டேபில் டென்னிஸ் டேபிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கு குக்கர் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.