திருமணம் செய்து வைப்பதாக கூறி காதல் பட பாணியில் கடத்திய தந்தை.. காப்பாற்றுங்கள் என கதறிய காதலன்!!
கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை கத்தி முனையில் பெண்ணின் குடும்பத்தார்கள் கடத்தி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரும் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து எதுவும் நடக்காதது போல் காதல் ஜோடிகள் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருப்தை கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்ணின் தந்தை தேனியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கார் கோவை அவினாசி அருகே சென்ற போது, விக்னேஷ் திடீரென்று காரில் இருந்து கீழே இறங்கி கூச்சலிட்டார். இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் காதல் ஜோடிகள் மீட்டு விசாரித்தபோது காலில் விழுந்து தங்களை காப்பாற்றும் படி கெஞ்சியுள்ளனர். இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் காதல் ஜோடிகளை கொலை செய்ய கடத்தி சென்றனரா என்று பல்வேறு கோணத்தில் பெண்ணின் தந்தை ஆறுமுகசாமி உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.