பக்கோடாவில் இறந்து கிடந்த பல்லி....வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

நெல்லை அருகே உள்ள இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.

பக்கோடாவில் இறந்து கிடந்த பல்லி....வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல லாலா கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடை பெயருடன் கூடிய பாக்கெட்டில் பக்கோடாவுடன் பல்லி பொறியலும் சேர்த்து வழங்குவது தொடர்பாக புகைபடங்கள் வலைதளத்தில் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர்  திடீரென ஸ்ரீராம் லாலா கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பு பலகாரங்கள் கண்ணாடி கொண்டு மூடப்படாமல் திறந்த வெளியில் வைத்தபடி விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் பலகாரங்கள் செய்யும் சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. பின்னர் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட ரசகுல்லாவை அதிகாரிகள் கீழே ஊற்றி அழித்தனர்.

ஜாங்கிரி மற்றும் ஓமப்பொடி ஆகிய பலகாரங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர் மேலும் 24 மணி நேரத்தில் கடையை சுத்தப்படுத்துவதுடன் பலகாரங்கள் வைக்கப்படும் இடங்களை கண்ணாடி கொண்டு மூடி பாதுகாப்பாக வைக்கும்படி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுவரை கடையில் பலகாரங்களை விற்பனை செய்ய கூடாது எனவும் 24 மணி நேரத்திற்கு பிறகு மறு ஆய்வு நடத்திய பிறகே கடையில் மீண்டும் விற்பனையை தொடங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக அதிகாரிகள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.