உணவகத்தில் மது போதையில் ரகளை செய்த வழக்கறிஞர்கள்...! கைது செய்த போலீசார்..!
தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இருவரை கைது செய்த நிலையில் மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை இராயபுரம் பகுதியில், ஷேக் மேஸ்திரி தெருவில் குகன் என்பவருக்கு சொந்தமாக அமைந்துள்ள மெட்ராஸ் தாபா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு விஜய், திவாகர் என்ற இரு வழக்கறிஞர்கள் மது போதையில் வந்து, கடையின் வாசலில் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட கடை ஊழியர்களாக ரியாஸ் மற்றும் அப்துல் ரஸ்மான் ஆகிய இருவரும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், விஜய் மற்றும் திவாகர் இருவரும் தனது மற்ற நண்பர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதலில் கடையின் உள்ளே இருந்த கட்டிங் பிளேட், உணவுக்கு பயண்படுத்தப்படும் கரண்டி போன்றவற்றை வைத்து தாக்கியுள்ளனர். இதில் கடை ஊழியரான ரியாஸ் மற்றும் அப்துல் ரஸ்மான், கடை உரிமையாளரான குகன் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த காட்சிகள் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலிசார், விஜய் மற்றும் திவாகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.