"பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது" எல்.முருகன்!

ஒரு சிலரை கைது செய்து விட்டால் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு மாநில தலைவரின் வீட்டின் முன் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை சிலர் எதிர்த்த காரணத்தினால் பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் நடத்தி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இது போல் மிரட்டல்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்ச மாட்டார்கள். பா.ஜ.க. தியாகத்திற்கு பெயர் போன கட்சி. பல தொண்டர்களின் உழைப்பு தியாகத்தினால் வளர்த்த பா.ஜ.க. கட்சிக்கு ஒரிரு கைதால் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. கொடி கம்பம் வைத்த பின் பல காரணங்களை சொல்லுகின்றனர். திமுக உயரமான கொடி கம்பங்கள் பட்டியல் உள்ளது. அந்த கொடி கம்பங்கள் பாதுகாப்பானதா? " எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.