கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்... அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்... அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட  இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் திருக்கோவிலினுள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில்  உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட  மற்ற சன்னதிகளுக்கு கொண்டு சென்று பரணி தீபத்தினை ஏற்றினார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3 ஆயிரத்து 500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.