ஆபத்தை உணராமல் செங்குத்தான உதகை மலைப்பாதையில் ஜீப் ரேஸ் விடும் ஜீப் ஓட்டுனர்கள்!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆபத்தை உணராமல் செங்குத்தான மலைப்பாதையில் அதிவேகமாக செல்லும் ஜீப் ரேஸின் வீடியோ வெளியாகி வரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கல்லட்டி மலைப்பாதை உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதும், செல்வதுமாக இருப்பர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுவாக அங்கு நிற்கும் ஜீப்களில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஏற்றி வரும் ஜீப் டிரைவர்களுக்கு, இந்த மலைப்பாதை, மிகவும் செங்குத்தாக இருப்பதாலும் ஆபத்து நிறைந்த பகுதி என்பதாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

ஏற்கனவே ஜீப் டிரைவர்கள் மீது விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும் அதிவேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள் எனவும் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் ஜீப் ரேஸ் நடத்தும் ஒரு வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்த வீடியோவில்  செங்குத்தான சாலையில் தொடர்ந்து அதிவேகமாக ஜீப் செல்வதும் ஜீப் உள் இருக்கும் சுற்றுலா பயணிகள் சத்தமிடுவதும் என இந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதை தற்போது சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.