அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா?...இன்று வெளியாகும் தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா?...இன்று வெளியாகும் தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 போ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கவுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்மானங்கள் குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். 

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது வக்கீல் வாதம் 7 நாட்கள் நடைபெற்றது. இருதரப்பு வழக்கறிஞா்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும், அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் முகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.